டிரெண்டிங்

“தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்” - ஸ்டாலின்

webteam

தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் காலிக்குடங்கள் இங்கே; தண்ணீர் எங்கே? என்ற வாசகங்கள் அடங்கிய காலிக்குடத்துடன் ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், “மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தியிருந்தால் தவறில்லை. ஆனால் மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை. தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளவே யாகம் நடத்தியிருக்கிறார்கள். தண்ணீர் இல்லை எனக் கூறி பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் இல்லை எனக்கூறி பள்ளிகளை மூடக்கூடாது என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். 

அதிமுகவினர் யாகம் நடத்துவது தவறு என்று கூறவில்லை. ஆனால் மழைக்காக முன்கூட்டியே தண்ணீர் பஞ்சம் வராதவாறு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நல்லாட்சித் துறை அமைச்சர் என அழைத்தனர். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை நடத்தப்படும். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை பெற்று தருவோம். சபாநாயகரை நீக்குவதை விட முதலமைச்சராக உள்ள பழனிசாமியை நீக்க வேண்டும். தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.” எனப் பேசினார்.