டிரெண்டிங்

சமாஜ்வாதி மாநிலங்களவை எம்பி ராஜினாமா - பாஜகவுக்கு தாவுகிறாரா? 

webteam

சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்பி சுரேந்திர நாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக சுரேந்திர நாகர் இருந்து வந்தார். இவர் சமீப காலமாக கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேறுகிறார் எனத் தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். 

இந்நிலையில் அவரின் கடிதத்தை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சுரேந்திர நாகர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து இவர் பாஜக தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. அத்துடன் இவர் பாஜகவில் சேர்ந்து மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. 

ஏற்கெனவே மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸ் கட்சியிலிருந்த சஞ்செய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீரஜ் சேகர் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். அதேபோல தெலுங்கு தேசம் கட்சியின் நான்கு மாநிலங்களவை எம்பிக்களும் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.