டிரெண்டிங்

“தேர்தல் ஆணையமே இறுதி” - வேலூர் சோதனை குறித்து சத்யபிரதா சாஹூ

webteam

வேலூரில் வருமான வரி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசனின் பள்ளிக்குப்பம் அருகே உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, வேலூரிலுள்ள சிமெண்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

மேலும்  “1950 என்ற எண்ணில் நிறைய புகார்கள் வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிறைய பணப்பறிமுதல் செய்துள்ளோம். அனைத்து அறிக்கைகளும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபடும். தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும்.” எனத் தெரிவித்தார்.