டிரெண்டிங்

பிரதமர் மோடியை எதிர்த்து பிஎஸ்எஃப் முன்னாள் வீரர் போட்டி!

webteam

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக, எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதுார் யாதவ் அறிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ரேவரியை சேர்ந்தவர், தேஜ் பஹதுார் யாதவ். ஜம்மு - காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார். கடந்த, 2017 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட் டார். இது வைரலானது. இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், அவர் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி கூறும்போது, ’என்னை தங்கள் கட்சியில் சேரும்படி சில அரசியல் கட்சிகள் அணுகின. ஆனால் அதில் சேரும் எண்ணமில்லை. பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை பயன்படுத்தி வாக்கு கேட்கிறார். ஆனால், ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்வதில்லை.

குறிப்பாக துணை ராணுவப்படையினருக்கு அவர் எதையும் செய்வதில்லை. இதை, நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப் போகிறேன். வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை. இந்த அரசு பாதுகாப்பு படைக்கு எதுவும் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே தேர்தலில் நிற்கிறேன்’ என்றார்.