டிரெண்டிங்

ஆவடி: போதையில் இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்து எரிப்பு - ரவுடி கும்பல் அட்டூழியம்

kaleelrahman

அம்பத்தூரில் இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி குடிபோதை ஆசாமிகள் அட்டூழியம் செய்தனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பம் முருகாம்பேடு, புதிய அருள்நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மோகன் (27). எலக்ட்ரீசியன் வேலை செய்துவரும் இவர், தனது தம்பி சிவா (24), மாமா மணிகண்டன் (30) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு மோகன், சிவா, மணிகண்டன் ஆகியோர் வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பினர். இதன் பிறகு, அவர்கள் தங்களது பைக்குகளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர், இன்று அதிகாலையில் இவர்களது மூன்று பைக்குகளும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை அடுத்து, சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மூவரும் எழுந்து வந்து எரிந்த பைக்குகளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில், 3 பைக்குகளும் எரிந்து சேதமானது. இதேபோல, அதே பகுதியில் உள்ள விஜய் அவன்யூவில் வசிப்பவர் சூர்யா (25). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது வீட்டின் முன்பு தனது பைக் மற்றும் மொபட் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தார். அதிகாலையில் இவரது இரு வாகனமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

சப்தம் கேட்டு அவர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார். அதற்குள் இரு வாகனங்களும் எரிந்து சேதமானது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்து மோகன், சிவா ஆகியோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அங்கு வந்த 6பேர் கொண்ட கும்பல் சிவா, சூரியா ஆகியோரது வீடுகள் முன்பு நிறுத்தி இருந்த பைக்குகளை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது தெரியவந்தது. மேலும், அந்த கும்பல் அப்பகுதியில் அதிகாலை வேளையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் உள்பட இருவரை தாக்கி உள்ளனர். இதில், அவர்களுக்கு வாய், காது ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியையும் உடைத்ததோடு, அங்கு வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் மது போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புகாரின் அடிப்படையில், எஸ்.ஐ செய்யது முபாரக் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். அதில், முருகாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஓலை மணி தலைமையில் 6பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வன்முறை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது அவர்கள் இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.