டிரெண்டிங்

கொரோனா சந்தேகம்: இறந்தவர் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

JustinDurai

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.

இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வரும் முன்னே அவர் நேற்று இறந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்று கருதிய குடும்பத்தினர் உடலை தகனம் செய்ய எஸ்டிபிஐ கட்சியினரை தொடர்பு கொண்டனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் பீர் மஸ்தான் தலைமையில் தன்னார்வ தொண்டர்கள், நேற்று மாலையில் அவரது  உடலை ஆம்புலன்ஸ் மூலம் வி.கே.புரத்தில் உள்ள நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இங்கு தகனம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த வி.கே.புரம் காவல் உதவி  ஆய்வாளர் மணிகண்டன் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் வி.கே.புரம் அம்பலவாணபுரத்திலும் 58 வயதானவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்னே நேற்று உயிரிழந்தார்.