டிரெண்டிங்

ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா? - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து

rajakannan

ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், அதற்கான சட்டதிருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு அறிமுகம் செய்தது. மக்களவை, மாநிலங்களவையில் இந்த மசோதா தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை கருத்தில் கொண்டே பாஜக இத்தகைய மசோதாவை கொண்டு வந்துள்ளது என்று விமர்சித்தாலும், இறுதியில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதனால், இரு அவைகளிலும் எவ்வித சிக்கலும் இல்லாமல் மசோதா நிறைவேறியது. திமுகவும், அதிமுகவும் தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் மசோதா பற்றி ப.சிதம்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். , “பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம் !. மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு! . ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சி 10 சதவிகித மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ள நிலையில், ப.சிதம்பரம் அதனை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.