டிரெண்டிங்

“பாரத் மாதா கீ ஜே சொல்லாத சபாநாயகரிடம் பதவியேற்க முடியாது” - பாஜக எம்.எல்.ஏ

rajakannan

‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத சபாநாயகரிடம் பதவியேற்க முடியாது என்று தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ளார். 

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 88 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்தது. அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி 7 இடங்களை கைப்பற்றியது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 இடங்களை கைப்பற்ற, பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அசாதுதீன் கட்சியைச் சேர்ந்த மும்தாஜ் அகமது கானை தற்காலிக சட்டசபை சபாநாயகராக நியமிக்க டிஆர்எஸ் முடிவு செய்துள்ளது. 

பாஜகவைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏவான ராஜா சிங், அகமது கானிடம் எம்.எல்.ஏவாக பதவியேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், “தற்காலிக சபாநாயகரான அகமது கானின் கட்சி ஹிந்துக்களை மறைக்க நினைப்பதால், அவரிடம் பதவியேற்க நான் விரும்பவில்லை. அவர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியதேயில்லை. பாரத் மாதா கீ ஜே சொன்னதே இல்லை” என்று ராஜா சிங் கூறியுள்ளார். எம்.எல்.ஏ ராஜா சிங் சர்ச்சையான பேச்சுக்களுக்கு அடிக்கடி பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.