டிரெண்டிங்

மதுரை: வீடுகளில் வரையப்பட்டுள்ள சந்தேக குறியீடுகள்... கொள்ளையடிக்க திட்டமா...?

மதுரை: வீடுகளில் வரையப்பட்டுள்ள சந்தேக குறியீடுகள்... கொள்ளையடிக்க திட்டமா...?

kaleelrahman

 வீடுகளில் குறியீடு வரையப்பட்டுள்ளதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.


மதுரை கே.புதூரில் அரசு அதிகாரிகள் குடியிருப்பு டி.ஆர்.ஓ காலனி உள்ளது. இங்கு மதுரை மாநகரில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி உள்பட உயர் அதிகாரிகளின் வீடுகளும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ளது.


இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியில் வீடுகளின் கதவு அருகே ரகசிய சந்தேக குறியீடுகள் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ளது. குறியீடுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக பச்சை, ஆரஞ்சு என இரு கலர்களில் பென்சிலால் வரையப்பட்டுள்ளது.


இந்த குறியீடு சாதாரணமாக நாம் அறியக்கூடிய வகையில் இல்லை. சில எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உள்ளது. அரசு குடியிருப்பு பகுதியை பொருத்தவரை அனைவரும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் தான் வீடு திரும்புவார்கள். சிலர் இரவுநேர பணிக்கு சென்று விடுவார்கள். அதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் மர்ம நபர்கள் வீடுகளில் இதுபோன்ற சந்தேக குறியீடுகளை வரைந்துள்ளது. அங்கு வசிப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சந்தேக குறியீடு போடப்பட்டுள்ள சில வீடுகளில் இருசக்கர வாகன திருட்டும் நடந்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்திலும், மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்திலும் குடியிருப்பு வாசிகள் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.