டிரெண்டிங்

கொடைக்கானல்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி

கொடைக்கானல்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி

kaleelrahman

கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் சோப்பு நுரை விற்கும் பார்வை மாற்றுத்திறனாளி மகன், கணவரை இழந்த மூதாட்டி, இருவரும் இடியும் நிலையில் உள்ள மண்குடிசை வீட்டில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து அதரவற்ற நிலையில் வசித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்தவர் பார்வைமாற்றுத் திறனாளி யோகராஜ், இவர் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் சோப்புநுரை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தனது தாயார் தெய்வானையை காப்பாற்றி வந்துள்ளார்.

தற்போதைய கொரோனா பொது முடக்கத்தால், சுற்றுலாதலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அவர்களது ஒரே வாழ்வாதாரமும் முடங்கி, பசி பட்டினியுடன் வாழ்வதாக உள்ளூரில் உள்ள சமூக நல விரும்பிகள் சிலருக்கு தகவல் வந்தது. அதனை அடுத்து அவர்கள் வீடுதேடிச் சென்று, அவர்களுக்கு தேவையான உணவு, குளிருடைகள், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.


மேலும் மேற்கூரையின்றி இடியும் நிலையில் உள்ள மண்வீட்டில் வழ்வதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்கள் வசிக்கும் வீட்டை, அரசின் உதவியுடன் சீரமைத்து தருவதாக அவர்களிடன் உறுதியளித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு வரிசெலுத்துவதாகவும், இந்த வீட்டினை பசுமை இல்லம் திட்டத்தின் மூலம், அரசு கட்டித்தந்தால் எஞ்சியுள்ள நாட்களை கழித்து நிம்மதியாக வாழ்வோம் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதை உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, அவர்கள் நிலைகுறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும் என்று உறுதியளித்துள்ளார்.