டிரெண்டிங்

நீர் உறிஞ்சும் சவுக்கு, குங்கிலியம்.... குடிநீர் ஆதார அணைகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

kaleelrahman

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகமாக பெய்துள்ளதாக, தோட்டக்கலைத் துறையின் மழை அளவு குறிப்பேடுகளில் பதிவாகியுள்ளது. மேல்மலை பகுதிகளில் அதிகமாக பெய்த தென்மேற்கு பருவமழையால், எழும்பள்ளம், கோணலாறு, பேரிஜம், அருன்கானல் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. 

 ஆனால் கொடைக்கானல் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், மனோரத்தினம் சோலைக்குள் அமைந்துள்ள மேல் மற்றும் கீழ் அணைகள் நிரம்பாமல் உள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தாலும், அணையை சுற்றி அதிக நீரை உறிஞ்சும் சவுக்கு மற்றும் குங்கிலியம் போன்ற அன்னிய மரங்கள் வளர்ந்து நீர் ஊற்றெடுக்க விடாமல் தடுக்கிறது. இதனால் இந்த இரண்டு அணைகளும் நிரம்பவில்லை என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

எதிர்காலத்தில் இதுபோல குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அணையை சுற்றி வளர்ந்துள்ள அன்னிய மரங்களான சவுக்கு மற்றும் குங்கிலியம் உள்ளிட்ட மரங்களை அகற்றி, பெய்யும் வடகிழக்கு பருவமழையை தேக்கி, ஆண்டு முழுவதும் ஊற்று ஏற்படுதும் இயற்கையான புல்வெளிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.