டிரெண்டிங்

“மாற்றம் தவிர்க்க முடியாதது” - குஷ்பு சூசகம்..!

webteam

மாற்றம் தவிர்க்க முடியாது என்றும், பலரும் தன்னிடம் ஒரு மாற்றத்தை பார்ப்பதாகவும் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இந்தத் தகவலை, அண்மையில் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பேசிய குஷ்பு செய்தியாளர்களிடம் மறுத்திருந்தார். அத்துடன் தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்த குஷ்பு, “பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தை கொடுக்கும். கனவுகள் புதியவை. லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவின்போது ஒரு புகைப்படத்தையும் குஷ்பு வெளியிட்டிருக்கிறார். அதில் காவி நிறம் போன்ற உடையை குஷ்பு அணிந்திருக்கிறார். அந்தப் பதிவிற்கு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன், ‘புரிந்துகொண்டோம்’ என கமெண்ட் செய்துள்ளார். இதனால் குஷ்பு பாஜகவிற்கு செல்கிறாரா ? என்ற கேள்வி மீண்டும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பூ நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.