டிரெண்டிங்

”திமுகவினரை தொட்டு பார் தம்பி”- பாஜக அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

webteam

பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையின், செந்தில்பாலாஜி குறித்த விமர்சனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பரப்புரையொன்றில் பேசிய செந்தில்பாலாஜி, “திமுக ஆட்சிக்கு வந்த உடன் மாட்டு வண்டியை ஆற்றுக்கு ஓட்டலாம். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார். ஒரு வேளை தடுத்தால் என்னை அழையுங்கள். அந்த அதிகாரி அங்கு இருக்க மாட்டார்.” என்றார். 

இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, ”செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பற்கள்லெல்லாம் வெளியே வந்து விடும். கர்நாடக முகத்தை காட்ட வேண்டாம் என நினைக்கிறேன் ” என்றார்.

இந்த நிலையில் போடிநாயக்கனுரில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி அந்த விமர்சனத்திற்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “ திமுகவினரை தொட்டு பார் தம்பி. தமிழகத்தில் பாஜகவின் வேலை எடுபடாது.திமுகவினரை மிரட்ட முடியாது, நாங்க எழுந்தா தாங்கமாட்டீங்க” என்றார்.