டிரெண்டிங்

புதுயுகம் படைக்க புறப்பட்டு வருக: கமல்ஹாசன் அழைப்பு

Rasus

புதிய கட்சியின் பெயரை கமல்ஹாசன் நாளை அறிவிக்க உள்ள நிலையில் தனது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைவரும் வருக வருக என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள கமல்ஹாசன் மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக நாளை முதல்( பிப்ரவரி 21) தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்து வருகிறார்.  முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோரை கமல் சந்தித்துப் பேசினார். திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் புது யுகம் படைக்க அனைவரும் வருக என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க” என தெரிவித்துள்ளார்.