டிரெண்டிங்

திண்டுக்கல் : அரசை கண்டித்து வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்

webteam

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் அதன் பலனை பொது மக்களுக்கு வழங்காமல் மத்திய அரசு வரலாறு காணாத அளவு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி உள்ளதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வணிகர்கள் இரண்டு பேரை அடித்து படுகொலை செய்ததாக காவல்துறையை கண்டித்தும், கொரோனா காலத்தில் பொது மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் மின் கட்டணத்தில் பகல் கொள்ளை அடித்து வருவதாக தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் வலியுறுத்தியும் திண்டுக்கல் - பழநி சாலையில் உள்ள சக்தி திரையரங்கம் அருகில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் ஒருவரை அமரவைத்து வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் தனிநபர் இடைவேளையை பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.