டிரெண்டிங்

'கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆனபோது மோசமாக உணர்ந்தேன்' – ப்ரியம் கார்க்

JustinDurai

'நன்றாக விளையாடினீர்கள். எனது ரன்-அவுட்டைப் பற்றி மறந்துவிடுங்கள்' என்று கேன் வில்லியம்சன் தன்னிடம் கூறியதாக ப்ரியம் கார்க் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் அணியின் முக்கிய நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

கேன் வில்லியம்சன் பந்தை மிட் விக்கெட் திசையில் தட்டி விட்டு, ரன் ஓட முயன்றார். ஆனால், ப்ரியம் கார்க் பந்தை பார்த்துக் கொண்டே நின்று விட்டார். இதனால் வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.

இதனால் ப்ரியம் கார்க் மீது கேன் வில்லியம்சன் கோபம் கொண்டார். எப்போதுமே கூலாக விளையாடும் அவர், இளம் வீரர் மீது கோபம் கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தாலும் 26 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஹைதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதோடு, ஆட்ட நாயகனாகவும் தேர்வானார் ப்ரியம் கார்க்.  

கேன் வில்லியம்சனின் ரன் அவுட் குறித்து ப்ரியம் கார்க் கூறுகையில், ‘’ நான் அப்போது மிகவும் மோசமாக உணர்ந்தேன். ஏனெனில் அப்போதுதான் வில்லியம்சன் களத்தில் செட்டாகி இருந்தார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால் அவர் ரன்-அவுட் ஆனார். அது ஒரு தவறு.

அதேநேரம் என்னால் அடுத்து ரன்கள் எடுக்க முடிந்தது, அதனால் நான் நன்றாக உணர்ந்தேன்.  நான் திரும்பி வந்தபோது நன்றாக விளையாடியதாக பாராட்டிய கேன் வில்லியம்சன் அவர், தனது ரன்-அவுட்டைப் பற்றி மறந்துவிடுங்கள்' என்றார்’’ என்று ப்ரியம் கார்க் கூறினார்.