டிரெண்டிங்

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

kaleelrahman

திருவள்ளூரில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இருபுறங்களிலும் 3 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள நாராயணபுரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


இந்நிலையில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்படாததால் ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் நாள்தோறும் அணிவகுத்து நிற்கின்றன. இதைத் தொடர்ந்து பட்டரைபெருமந்தூர் முதல் நாராயணபுரம் வரை இருபுறங்களிலும் சுமார் 3கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர்.

வாகன நெரிசலை சீர்செய்ய போதிய போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் நிரந்தர தீர்வாக மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.