டிரெண்டிங்

விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா செய்வார்: சுக்பீர் சிங்

விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா செய்வார்: சுக்பீர் சிங்

sharpana

விவசாயிகள் தொடர்பான மூன்று மசோதாக்களை நிறைவேற்றினால், ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

இன்று மாநிலங்களவையில் ’அத்யாவசிய பொருட்கள் மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விலை நிர்ணயம் மசோதா’ ஆகியவை வாக்கெடுப்புக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ள இந்த மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் இதைனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மசோதாவுக்கு ஆதரவாக பஞ்சாப் எம்.பிக்கள் வாக்களித்தால் ஊருக்குள் விடமாட்டோம் என்று விவசாயிகளும் எச்சரித்தனர்.

இதனால், பஞ்சாபின் முக்கிய கட்சியும் பாஜகவின் கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் கடந்த வாரம் இதனை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மத்திய அமைச்சராக உள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியின் தலைவரும், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கணவருமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

 சிரோமணி அகாலிதளம்  கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறார். மூன்று முறையும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றவர், கடந்த 2014 ஆம் ஆண்டு உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ஆனார். அதோடு, கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இதே துறையின் அமைச்சர் பதவி இவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.