டிரெண்டிங்

94 வயதில் தேர்தலில் போட்டி - இந்தியாவிலேயே அதிக வயதில் களம் காணும் பிரகாஷ் சிங் பாதல்

94 வயதில் தேர்தலில் போட்டி - இந்தியாவிலேயே அதிக வயதில் களம் காணும் பிரகாஷ் சிங் பாதல்

Veeramani

இந்தியாவில் ஒரு அரசியல் தலைவர் 94 வயதிலும் தேர்தலில் களம் காண்கின்றார். இந்தியாவிலேயே அதிக வயதில் தேர்தலில் போட்டியிடும் நபரும் இவர்தான், யார் அவர் என பார்ப்போம்.

இந்திய தேர்தலின் சுவாரஸ்யமான விஷயமே 18 வயது நிரம்பிய இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். வயது, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது. அப்படி பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் 94 வயதான ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வேறு யாருமல்ல பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் அவர்கள்தான்.

இதற்கு முன்பாக 2016 கேரள சட்டமன்ற தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி எஸ் அச்சுதானந்தன் 92 வயதில் போட்டியிட்டது தான் இதுவரை அதிக வயதில் தேர்தல் களம் கண்ட, அதிக வயதுடைய நபராக இருந்தார். தற்போது அந்த சாதனையை முறியடித்திருக்கிறார் பிரகாஷ் சிங் பாதல்.

1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பிறந்த பிரகாஷ் சிங் பாதல், நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றபோது மிக இளம் வயதில் ஒரு மாநிலத்தின் முதல்வராக நபர் என்ற பெருமையை பெற்றார்.

அதன்பிறகு 1977, 1997,2007,2012 என ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பஞ்சாப் மாநிலத்தை முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெறும் 15 இடங்களை மட்டுமே பிரகாஷ் சிங் பாதலின் சிரோன்மணி அகாலிதளம் கட்சியால் பெற முடிந்தது. அதைவிட மோசமான விஷயம் மாநிலத்திற்கு மிகப் புதிதாக வந்த ஆம் ஆத்மி கட்சியை விட குறைவான இடங்களை மட்டுமே அந்த கட்சியால் பெற முடிந்ததுடன் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது.

தவறு எங்கே என்பதை உணர்ந்த பிரகாஷ் சிங் பாதல் உடனடியாக பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முடிப்பதற்கான சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தவுடன் அதனை காரணம் காட்டி கூட்டணியை முடித்தவுடன், தற்பொழுது பகுஜன் சமாஜ் கட்சி யுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறார். இதில் மிக முக்கியமான விஷயம் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வழங்கிய பத்மவிபூஷன் பட்டத்தை, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக தூக்கி எறிந்தார் அவர். இதன் மூலமாக பஞ்சாப் மக்களிடம் தனது தனிப்பட்ட இமேஜை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள தனது கட்சியினரை உற்சாகப்படுத்த ஆறாவது முறையாக, 25 ஆண்டுகளாக தனக்கு தோல்வியே தராத லம்பி சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறார்.

கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில அரசியலில் கிங்காகவும், கிங்மேக்கராகவும் இருந்து வரும் பிரகாஷ் சிங் பாதல் 94 வயதிலும் தளராத உற்சாகத்துடன் இளைஞர்களுக்கு சரிசமமாக ஆற்றலுடன் தேர்தலை சந்திக்கிறார்.