டிரெண்டிங்

“ஸ்டாலின் விரக்தியின் விளிம்பிற்கு சென்றிருக்கிறார்” - முதல்வர் பழனிசாமி

webteam

மத்திய பட்ஜெட் குறித்தும் ஸ்டாலினின் கிராம சபை குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, கிரமாப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, 2022 க்குள் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதிய அறிவிப்பும் நன்மை பயக்கும் ஒன்று. 

திட்டத்தை அறிவித்தால் அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். அறிவிக்காவிட்டால் பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என விமர்சிக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சியிலேயே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பயிர்க்கடன் தரப்படுகிறது. தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படுகின்றன. மேலும் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது.  படித்த இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். தொழில் துவங்குவதற்கு அனைத்து வசதிகளையும் மாநிலம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நேரடியாக 5 லட்சம் பேருக்கும் மறைமுகமாக 5.5 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். 

தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. மத்திய அரசு என்பது மாநிலங்களில் பிரச்னைகளை அறிந்துதான் எதையும் அறிவிப்பார்கள். 

இது ஒரு ஜனநாயக நாடு. அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் எது நியாயமான கோரிக்கையோ அதை அரசு நிறைவேற்றும். 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளித்தோம். மத்திய அரசு அறிவித்தபடி அகவிலைப்படி தந்தோம். யார் போராட்டம் நடத்தினாலும் சட்ட ரீதியாக எடுக்கப்படும். அதேபோன்ற நடவடிக்கைகள  அரசு ஊழியர்கள் மீதும் எடுக்கப்பட்டிருக்கிறது. 2003 க்கு பிறகு பணியில் சேர்வோர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இதை தெரிந்தேதான் அவர்கள் பணியில் சேர்கிறார்கள்.  

எங்களை தாக்கி பேசவே ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை பயன்படுத்துகிறார். மக்களுக்கு நன்மை பயக்க அல்ல. காழ்ப்புணர்ச்சியால் கிராம சபைக்கூட்டத்தில் தேவையற்ற கருத்துகளை ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் விரக்தியின் விளிம்பிற்கே சென்றிருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.