டிரெண்டிங்

மனநிலை மாறுபாடுடன் பிடிபட்ட சிறுத்தை : வனத்துறை தீவிர சிகிச்சை

webteam

உதகையில் மனநிலை மாறுபாடு மற்றும் பார்வை குறைபாடுடன் பிடிபட்ட சிறுத்தைக்கு வண்டலூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் நோய்வாய்ப்பட்ட சிறுத்தை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகை வடக்கு வனப்பிரிலிருந்து மீட்கப்பட்ட ஆண் சிறுத்தைக்கு, தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் அவசர மற்றும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் சிறுத்தைக்கு நரம்பு மண்டல மற்றும் மனநிலை மாறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் நரம்பியல் பரிசோதனையில் அதற்கு பார்வை கோளாறு இருப்பதும், நடையில் இடையூறுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த சிறுத்தை தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளதகாவும், முதற்கட்ட பரிசோதனைகள் முடிக்கப்பட்டு ரத்தப்பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த மாதிரியில் இரத்த ஒட்டு உண்ணிகள் மற்றும் பிற நோய் எதுவும் உள்ளதா என்பதைக் கண்டறிய, அதற்கான பரிசோதனைக் கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரியல் பூங்காவின் மருத்துவர்கள் அதற்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.