டிரெண்டிங்

இரண்டு உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா : 2 காவல்நிலையங்கள் மூடல்..!

webteam

திருப்பத்தூரில் வெவ்வேறு இரண்டு காவல்நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவை இரண்டும் மூடப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் கிராமிய காவல் நிலையத்திற்கு சென்னையிலிருந்து பணி மாறுதல் பெற்று காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்று பணிக்கு வந்தார். அவருக்கு கொரோனா ஆய்வு செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினார்.

இதேபோன்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானது. இதனால் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, பின்னர் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அத்துடன் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் சென்று வந்த கந்தலி காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம், காவல்துறையினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.