டிரெண்டிங்

பரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞர் - கன்னத்தில் அறைந்த குஷ்பு

webteam

கர்நாடகாவில் தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, தவறாக நடக்க முயன்றவரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல்கள் 18ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், கர்நாடகாவின் 14 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கர்நாடகாவில் ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக‌ ஹொய்சாலா நகருக்கு நடிகை குஷ்பு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் அவரைக் காண முட்டிமோதினர். 

இதனால் கூட்ட நெரிசலில் சிக்கியபடி குஷ்பு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது பின்னால் வந்த நபரின் கன்னத்தில் குஷ்பு பளார் என அறைந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் என்ன நடந்தது என அறியாமல் திகைத்தனர். தவறாக நடக்க முயற்சித்ததால், ஆத்திரமடைந்த குஷ்பு அவரை அறைந்தது பின்னர் தெரியவந்தது.