டிரெண்டிங்

“கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார்”: முதலமைச்சரின் பேச்சால் நெட்டிசன்கள் கிண்டல்

rajakannan

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக அமைச்சர்கள் சிலரின் பேச்சுகள் சமீப காலமாக விவாதத்திற்கு ஆளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில் அதிகம் அடிபடுவது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெயர்தான். திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார் என்று கூறினார். பிரதமர் மோடிக்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என கூறிய அவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அந்த வரிசையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமியின் பேச்சு சிக்கியுள்ளது. தஞ்சையில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கம்பராமாயணத்தை தந்த சேக்கிழார் என்று கூறினார். கம்பராமாயணத்தை எழுதியது கம்பர் என்பது மிகச் சாதாரண செய்தி. சேக்கிழார் எழுதியது பெரிய புராணம் ஆகும். முதலமைச்சரின் இந்த பேச்சை சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வேகமாக பரவி வருகிறது. வழக்கம்போல் நெட்டிசன்கள் பலமாக கிண்டலடித்து வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “காவிரி குறுக்கே கல்லணை கட்டிய கரிகால் சோழன், எண்ணற்ற கோவில்களை புனரமைத்த ரகுநாத நாயக்கர்,  தஞ்சையின் கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றை உலகறிய செய்த இரண்டாம் சரபோஜி மன்னன், மகாத்மா காந்தியின் உதவியாளராக இருந்த பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, சுதந்திர போராட்ட வீரர் சர் சுவாமி ஐயர், கணித மேதை சீனிவாச ராமானுஜர், கம்பராமாயணம் தந்த சேக்கிழார், கரிகாலன் வரலாற்றை எழுதிய உலக நாத பிள்ளை, தமிழ் வரலாறு எழுதிய சீனிவாசம் பிள்ளை, கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற எண்ண சரித்தரவான்களையும் சாதனைகளையும் பெற்ற பூமி இந்த தஞ்சை பூமி” என்றார்.