டிரெண்டிங்

“செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி” - முதல்வர் பழனிசாமி

“செந்தில்பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி” - முதல்வர் பழனிசாமி

webteam

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அரசியல் வியாபாரி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அமமுகவில் இருந்த செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் சில வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அதாவது 18 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில்பாலாஜி மீண்டும் அதே கட்சியில் இணைந்தார். ஸ்டாலினின் கொள்கை பிடிப்பால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்ததாக அதற்கு காரணம் தெரிவித்திருந்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், கரூர் மாவட்டதைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அதிமுக ‌இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி பச்சோந்தி போல் அடிக்கடி கட்சி மாறுபவர் என்றும், செய்த நன்றிகளை மறந்தவர் என்றும் சாடினார்.

மேலும், “பல்வேறு கட்சிகளுக்கு சென்றவர் செந்தில்பாலாஜி. பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்துதான் நிறம் மாறும். இதுவரை 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார் செந்தில்பாலாஜி. தற்போது எந்தக் கட்சியிலிருந்து வந்தாரோ அந்தக் கட்சிக்கே சென்று விட்டார். கொள்கை பிடிப்பில்லாதவர். அதிமுகவை உடைக்க, ஆட்சியை கவிழ்க்க சதி செய்தவர். ஆனால் இயக்கத்திற்கு இளைஞர்கள் தேவை எனக் கருதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செந்தில்பாலாஜிக்கு பதவி வழங்கினார். அந்த நன்றியை மறந்துவிட்டார் செந்தில் பாலாஜி. இவர்களை போன்றவர்கள் அவ்வபோது வந்துவிட்டு திரும்ப சென்றுவிடுவார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் விழித்து கொண்டோம். பிழைத்து கொண்டோம்” எனப் பேசினார்.