டிரெண்டிங்

புயல் பாதித்த மாவட்டங்களில் முதலமைச்சர் மீண்டும் ஆய்வு?

webteam

’கஜா’ புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘கஜா’ புயல் கடந்த 15ஆம் தேதி இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,
தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
ஆனால் அரசு தரப்பில் இருந்து பெரும்பாலும் நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து
வருகின்றனர். மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணப்பணிக்காக ரூ. 1000 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி சில தினங்களுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். 

இதனால் பெரும் சர்ச்சைகளை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி நடந்து சென்றால் அனைத்து இடங்களையும் பார்வையிட முடியாது என்பதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றதாக விளக்கம் அளித்தார். பின்னர் பிரதமரை டெல்லியில் சந்தித்த முதலமைச்சர் புயல் நிவாரண நிதியாக ரூ.1500 கோடி வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், ’கஜா’ புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி வரும் 28ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.