டிரெண்டிங்

திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

webteam

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜனவரி 28இல் வாக்குப் பதிவும், ஜனவரி 31 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் முறைகேடுகளை தடுக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இதனிடையே, கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முறையீட்டை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதுஒருபுறம் இருக்க, இதே கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இந்நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் டி.ராஜா தொடர்ந்த மனுவை குறிப்பிட்டு தேர்தல் அதிகாரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.