டிரெண்டிங்

‘கோட்சே ஒரு தேசபக்தர்’ - கமலின் பேச்சுக்கு பிரக்யா சிங் எதிர்ப்பு

rajakannan

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார் என்று பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் கூறியுள்ளார். 

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். 

கமல் பேச்சுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனால், முன் ஜாமீன் கோரி கமல் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக கமல் பேச்சு குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் அது விவாதத்தை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி வரை இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாதுராம் கோட்சே குறித்த கமலின் பேச்சுக்கு பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தேசபக்தராகவே இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த சாத்வி பிரக்யா தாக்கூர் தற்போது ஜாமீனில் உள்ளார். அவருக்கு பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.