டிரெண்டிங்

திருப்பூரில் அசாம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவர் கைது

kaleelrahman

திருப்பூரில் அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள உகாயனூர் பகுதியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண்ணை ஆறுபேர் கொண்ட கும்பல் முட்புதர் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனைத்தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர். 

மேலும் தலைமறைவாக இருந்த மூன்று பேரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமார், தாமோதரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இளந்தமிழனை பல்லடம் போலீசார் தேடிவந்த நிலையில் மதுரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்து அழைத்து வந்தனர். 

இதனையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஆய்விற்காக வந்த கோவை சரக டி.ஐ.ஜி நரேந்திரன் நாயர், அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைதுசெய்த பல்லடம் மகளிர் காவல்நிலைய போலீசாருக்கும், தனிப்படையினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.