டிரெண்டிங்

'தோசை சுட்டு தரவில்லை என கோபம்' - தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட போதை கணவர்.!

'தோசை சுட்டு தரவில்லை என கோபம்' - தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட போதை கணவர்.!

webteam


குன்றத்தூரில் குடிக்க பணம் தராமலும், தோசை சுட்டு தராமலும் இருந்த மனைவியின் மீது கோபம் கொண்ட கணவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(66). குடிப்பழக்கம் உடைய இவர் தினமும் அவரது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ரவி மனைவியிடம் சாப்பிடுவதற்கு தோசை சுட்டு தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவரது மனைவி வத்சலா வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ரவியின் மீதியிருந்த தீயை அணைத்து அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் இறந்து போன ரவிச்சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)