டிரெண்டிங்

அதிமுக அரசு அடங்கிப்போக அவசியமில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்

webteam

ஜெயலலிதா கொள்கைப்படி நடக்கும் அரசு யாருக்கும் அடங்கிப்போகும் அரசில்லை என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓபிஎஸ் அணியியுடன் நாங்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் இரட்டை இலை தொடர்பான வழக்கை முடித்துக் கொள்வோம். ஜெயலலிதா அரசாக தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கொள்கைப்படி நடக்கும் தமிழக அரசு யாருக்கும் பயப்படும் அரசில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எப்படி மதிப்பளித்தோமோ அதனைப் போல் மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு தனது கருத்தை பதிவு செய்யும். 
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 60 நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அவரை யார் தடுத்தது? என கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் தரப்பு முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவியை தந்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பது போல் சொல்கிறார்கள். இப்போது தான் அவர்களது உண்மை முகம் தெரிந்துள்ளது என்றார்.