டிரெண்டிங்

எதுவும் பேசக்கூடாது என்பதுதான் ஜனநாயகமா?: கமல்ஹாசன் ஆவேசம்

Rasus

சும்மா இருங்கள்.. எதுவும் பேசக்கூடாது என்பதுதான் ஜனநாயகமா என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகிற 21ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்றும் பெயர் வைத்துள்ளார். மேலும் சுற்றுப் பயணத்தை தொடங்கும் 21ம் தேதியே தனது கட்சியின் பெயரையும் அறிவிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். அப்போது, “நான் இங்கு தலைவனாக வரவில்லை. அரசியலுக்கு வருகிறேன் என்று கூறவும் வரவில்லை. தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். நாடு, படிப்பு, கல்விக் கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா?. தவறை இன்றே சரிசெய்ய வேண்டும். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள், அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான். அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய வகையில் காந்திதான் எனக்கு பிடித்த தலைவர். காமராஜர், பெரியார், எம்ஜிஆர், கருணாநிதியும் எனக்குப் பிடித்த தலைவர்கள்தான்” என்றார்.

மேலும் பேசிய கமல்ஹசான், “குழந்தைகள் எப்படி வளர நினைக்கிறார்களோ அவர்களை அப்படி வளரவிட வேண்டும். சும்மா இருங்கள், எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா? மாணவர்கள் மத்தியில்தான் அதிக தைரியத்துடன் பேச முடிகிறது. பத்மாவத் படத்தின் பெயரால் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்டுள்ளது. அன்பே சிவம், தேவர்மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது” என்றும் கமல்ஹாசன் பேசினார்.