டிரெண்டிங்

திருமணமாகாத 19 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவரின் செயலால் விபரீதம்

kaleelrahman

திருமணமாகாத 19 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ளது புதுக்காலணி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ என்ற ராஜலட்சுமி (45). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பெண் மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பெண் மருத்துவர் வெளிநாடு செல்ல ராஜலட்சுமி மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதியில் உள்ள பழமையான வீட்டினை வாடகைக்கு எடுத்து அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மண்ணச்சநல்லூர் அருகே சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத 19 வயது பெண்ணிற்கு கடந்த 7 நாட்களுக்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்பு செய்ததால் 19 வயது பெண்ணிற்கு தொடர் ரத்துப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பையை எடுத்தால்தான் பெண் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக கூறியதன் அடிப்படையில் பெண்ணிற்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருச்சி மாவட்ட குடும்பநல துணை இயக்குநர் டாக்டர் பிரியதர்ஷினி ஜீயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் போலி மருத்துவரின் கருக்கலைப்பு மையத்தில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்கு பயன்படுத்திய மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் லட்சுமி முன்னிலையில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.