டிரெண்டிங்

போதையில் நண்பர்களுக்குள் தகராறு... மது பாட்டிலால் இளைஞர் குத்திக் கொலை

kaleelrahman

கூடுவாஞ்சேரியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் இளைஞர் மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியா நகர் பகுதியை சேர்ந்த ஞானதாஸ் (28). மீன்வளத்துறையில் டிரைவராக பணியாற்றி வரும் இவர், தனது நண்பர் பிரபாகரன் (27) என்பவருடன் சேர்ந்து திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் மது அருந்தியுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன், ஆத்திரத்தில் பீர் பாட்டிலை உடைத்து ஞானதாஸின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில், கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் தப்பியோடிய பிரபாகரனை தேடி வருகின்றனர்.