டிரெண்டிங்

வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு : தூத்துக்குடியில் போராட்டம்..!

webteam

வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வெளியிட்டவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தொகுதித் செயலாளராக இருந்தவர். முகநூலில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து இவர் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளத்தூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுக்கூறி, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பபடும் என காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறப்படும் செல்லப்பா என்பவர், இன்று தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தார். இதைஅறிந்த அப்பகுதி பொதுமக்கள் நிகழ்ச்சி நடந்த வீட்டை முற்றுகையிட்டு, செல்லப்பாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார், செல்லப்பாவை பாதுகாப்பாக காவல்நிலையம் அழைத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.