டிரெண்டிங்

படிப்புக்கு பயந்து விபரீத முடிவை எடுத்த 10 ஆம் வகுப்பு மாணவன்

kaleelrahman

ஆன்லைன் வகுப்பு மற்றும் விரைவில் பள்ளி துவக்கப்பட இருப்பதால் மன நெருக்கடிக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் சஞ்சய் (15) தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதையடுத்து அவிநாசி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பி.எஸ்.சுந்தர வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (43). தனது மனைவி பிரதீபா (34) மற்றும் 3 மகன்களுடன் வசித்து வரும் இவர், திருப்பூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.; இவரது மூத்த மகன் சஞ்சய் (15) அவிநாசியை அடுத்து நாதம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.


படிப்பில் மிக சுமாரான சஞ்சய் கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்தாததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து மீண்டும் பள்ளிக்குச் சென்றால் வீட்டுப் பாடங்களை செய்ய வேண்டும் என்ற மன நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளார்.


இன்று காலை வழக்கம் போல சஞ்சியின் தந்தை வேலைக்குச் சென்றுள்ளார். தாயார் பிரதீபா ஆன்லைன் வகுப்பில் இருந்த சஞ்சயிடம், அருகிலுள்ள ரேசன் கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். இதையடுத்து வீடு திரும்பிய பிரதீபா வீட்டிலேயே சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கம் இருந்தவர்களை அழைத்து கதறியவாறு தகவலை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.