டிரெண்டிங்

18 எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை தொடங்குகிறது 3வது நீதிபதி விசாரணை

18 எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை தொடங்குகிறது 3வது நீதிபதி விசாரணை

webteam

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் தனது விசாரணை நாளை முதல் தொடங்கி 5 நாள்களுக்கு விசாரிக்குகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதனால், 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் வேறொரு நீதிபதியை நியமிக்க வலியுறுத்தி பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே. கவுல், அருண் மிஸ்ரா அமர்வு விசாரணை செய்து, 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரிக்கிறார்.  நாளை முதல் 27ஆம் தேதி வரை தினமும் மதியம் இந்த விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது