டிரெண்டிங்

“அப்படி பேசியதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் பிட்ரோடா” - ராகுல் காந்தி காட்டம்

webteam

சீக்கியர்கள் படுகொலை குறித்து அலட்சியமாக பதிலளித்ததற்காக சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நானாவதி கமிஷன் கூறியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டி பாஜக, காங்கிரஸை விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கேட்டிருந்தார். இதனை தேர்தல் பரப்புரையின் போது விமர்சித்த மோடி, “காங்கிரஸ் கட்சியை நடத்துபவர்களின் ஆணவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். அக்கட்சியின் மனநிலையையும், குணநலனையும் இது காட்டுகிறது” என சாடினார். பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த சாம் பிட்ரோடா எனது பேட்டியில் 3 வார்த்தைகளை வைத்து பா.ஜனதா, உண்மையை திரித்து கூறுவதாக குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். அதில்,“சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம்.1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கன்னா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  சீக்கியர் படுகொலை குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தவறானது என்றும் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு காங்கிரஸ் உடன்படவில்லை என்று விளக்கம் அளித்தார். மேலும் சீக்கியர்கள் படுகொலை குறித்து அலட்சியமாக பதிலளித்ததற்காக சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.