டிரெண்டிங்

“ரஃபேல் விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை” - பாரிக்கர் கொடுத்த அறிவுறுத்தல்

“ரஃபேல் விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை” - பாரிக்கர் கொடுத்த அறிவுறுத்தல்

webteam

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகம், தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திருடப்பட்டு, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 

மேலும் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் அலுவலகம் தனியாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியற்கு, பாதுகாப்பு அமைச்சக முன்னாள் துணைச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியும் சுட்டிக் காட்டினார். 

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுலின் பேச்சு ஆபத்தானது. மக்களுக்கு எதிராக மோடி செயல்படுவதாக சித்தரிக்கும் வகையில் பேசி ஆட்சியை மாற்ற ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்றார். 

இதற்கிடையே, ஆங்கில நாளேடு செய்தி குறித்து பாதுகாப்புத்துறை செயலர் ஜி.மோகன் குமார் வெளியிட்ட விளக்கத்தில், ஊடகங்களில் வெளியான கடிதம் ரஃபேல் விலைத் தொடர்பானது அல்ல என்றும், ராணுவ ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான பொதுவான விதிமுறைகள் குறித்தது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் பாதுகாப்புத்துறை விவரக் குறிப்பில் முன்னாள் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சில தகவல்களை அடிக்குறிப்பிட்டு எழுதியுள்ளார். அதில்,  “பிரதமர் அலுவலகமும் பிரான்சு அதிபர் அலுவலகமும் ரஃபேல் விவகாரத்தை கவனிப்பார்கள். இந்த விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை. எனவே அமைதியாக இருங்கள், அனைத்தும் நல்ல முறையில்தான் செல்கிறது ” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்போதயை பாதுகாப்புத்துறை செயலாளர் ஜி மோகன் குமார், “பத்திரிகைகளில் வெளியான செய்திகளுக்கும் ரஃபேல் விமானத்தின் விலை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவை அனைத்தும் இறையாண்மை உத்திரவாதம் மற்றும் பொது விதிமுறைகள் தொடர்பானது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஏர் மார்ஷல் சின்ஹா, “பத்திரிகையில் வெளியான மறுப்பு குறிப்பில் பாதுகாப்புதுறை அமைச்சரின் கருத்து வெளியிடப்படவில்லை” என்று கூறியுள்ளார்.