டெக்

ரான்சம்வேர் வைரஸ் மூலம் வான்னாக்ரை சம்பாதித்தது எவ்வளவு?

ரான்சம்வேர் வைரஸ் மூலம் வான்னாக்ரை சம்பாதித்தது எவ்வளவு?

Rasus

உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள கணினிகளை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியது. இதன் மூலம் வான்னாக்ரை குழு எவ்வளவு சம்பாதித்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வான்னாக்ரை குழு நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கு ரான்சம்வேர் வைரஸை அனுப்புவார்கள். மின்னஞ்சல் அட்டாச்மெண்டை திறப்பதன் மூலம் நமது கணினியில் ரான்சம்வேர் ஆதிக்கம் செலுத்தத் துவங்கும். நம்முடைய கணினியின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி, முக்கிய தகவல்கள் அனைத்தையும் சில வினாடிகளில் என்கிரிப்ட் செய்துவிடும்.

கணினி என்கிரிப்ட் ஆன பிறகு ஒரு செய்தி திரையில் தோன்றும், கீழ்காணும் மின்னஞ்சலுக்கு பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸியை குறிப்பிட்ட அளவு அனுப்பும்படி தெரிவிக்கும். இல்லையென்றால் தகவல்களை அழித்துவிடுவதாக ரான்சம்வேர் மிரட்டும்.

அனைத்து நாடுகளிலும் உள்ள இணைய பாதுகாப்பு அமைப்புகள் இத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளன.

யாருக்கு பணம் போய் சேர்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியாத பிட்காயின் எனும் குறியாக்கம் செய்த பணங்களையே (encrypted money) இக்குழுவினர் பெற்று வரும் நிலையில், இவர்கள் சம்பாதித்தது எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை பிரிட்டனை சேர்ந்த எல்லிப்டிக் என்ற மென்பொருள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வான்னாக்ரை குழுவினர் பிட்காயின்களை பெற்றுக் கொள்ளும் முகவரியை கண்டறிந்துள்ள இந்நிறுவனம், அம்முகவரியில் உள்ள கணக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய்) இருப்பதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், வான்னாக்ரை குழுவினர் தங்களுடைய பிட்காயின் கணக்கில் இருந்து பெரும் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.