டெக்

இந்தியாவில் முதன் முறையாக ’ஸ்மார்ட் விஷன்’ கண் கண்ணாடி மதுரை மருத்துவமனையில் அறிமுகம்

kaleelrahman

இந்தியாவில் முதன் முறையாக ’ஸ்மார்ட் விஷன்’ கண்ணாடியை மதுரை தனியார் கண் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் 'ஸ்மார்ட் விஷன் கண்ணாடி' (smart vsion spectacles) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்வை மாற்று திறனாளிகள் தங்கள் முன் உள்ள நபர்களையும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவும், எளிதாக படிக்கும் வகையிலும் பிரத்யேகமாக இந்த கண்ணாடி வடிமைக்கப்பட்டு இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது.

இதுகுறித்து விஜயலெட்சுமி (குறைந்த பார்வை சேவை பிரிவு தலைமை மருத்துவர்) பேசியபோது... சர்வதேச அளவில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துகளை படிக்க பல்வேறு நவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் உள்ள நிலையில், முற்றிலும் மாறுபட்ட பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் முன் உள்ள நபர்களை அறிந்து கொள்ளவும் அரவிந்த் கண் மருத்துவமனையும், பெங்களூரு எஸ்எச்ஜி டெக்னாலஜியும் இணைந்து ஸ்மார்ட் விஷன் கண்ணாடியை  (smart vsion spectacles) வடிவமைத்துள்ளோம்.

பார்வை குறைபாடுள்ளவர்கள் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வகையிலும் சாதாரண கண் கண்ணாடி போல் பார்வையற்றவர்கள் முகத்தில் பொருத்திக் கொள்ளவும் ப்ளாஷ் ஒளி இருப்பதால் இரவில் கூட இந்த சாதனத்தை பயன்படுத்தி பகலை போல் படிக்கலாம் என்று கூறியவர் தொடர்ந்து, இந்த கருவியைக் கொண்டு 73 மொழிகளை படிக்க முடியும் எனவும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.