ரோவர் நாசா
டெக்

செவ்வாய் கிரக காற்றுடன் பூமிக்கு திரும்பும் நாசாவின் 'Perseverance' ரோவர்... ஆச்சர்ய தகவல்கள் சில...

Jayashree A

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நாசா, பெர்சிவியரன்ஸ் (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இந்த ரோவர் தன்னுடன் சோஜனர் (Sojourner) வாய்ப்பு ஸ்பிரிட் மற்றும் க்யூரியாசிட்டி இஞ்ஜெனுட்டி (ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டரையும் கொண்டு சென்றது.

இந்த ரோவர் பூமியிலிருந்து 48 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்து, 2021 பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

நாசா இந்த ரோவரை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பியதன் நோக்கம், செவ்வாய் கிரகத்தின் சூழல்கள் மற்றும் நுண்ணுயிர்களின் முந்தைய ஆதாரங்கள், செவ்வாய் கிரகத்தின் பாறைகள், காற்று போன்றவற்றை ஆராய வேண்டும் என்பதற்காகத்தான். இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உண்டா என்பதை தெரிந்துக்கொள்ளவும் நினைத்தது நாசா.

செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சிவியரன்ஸ் தனது பணிகளை செய்ய ஆரம்பித்தது. அதன்படி தனது ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 24 மண் மாதிரிகளை சேகரித்து, தன்னிடம் உள்ள டைட்டானியம் குழாய்களில் சேமித்து வைத்ததோடு மட்டுமல்லாமல், தற்போது செவ்வாய்கிரகத்தில் உள்ள காற்றையும், குழாய்களில் அடைத்து பூமிக்கு எடுத்துவர உள்ளது பெர்சிவியரன்ஸ்.

முன்னதாக பெர்சிவியரன்ஸின் ரோவர் தனது ஆராய்ச்சியில், ‘செவ்வாயின் வடக்குப்பகுதியில் உள்ள சிர்டிஸ் நாற்கரத்தில் உள்ள ஜெஜ்ஸ்ரோ க்ரேட்டர் (இது 45 கி.மீ அளவுள்ள ஒரு பள்ளம்) என்ற பள்ளமானது தண்ணீர் இல்லாமல் இப்போது வறண்டுள்ளது. ஆனால் முன்பொரு காலத்தில் இங்கு ஆறுகள் ஓடியிருக்கின்றன, மேலும் அவ்விடத்தில் ஏரி இருந்ததற்கான அடையாளம் உள்ளன’ என்பதை கண்டுபிடித்திருந்தது.

இதன் ஆராய்ச்சியின் அடிப்படையில்தான், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் விளைவாக இன்றும் இங்குள்ள மண்ணில் வண்டல் மண் அதிகம் உள்ளதாக நாசா உள்ளிட்ட சில ஆய்வுக்கூடங்களிலுள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு ஆதாரமாக, பழங்கால வாழ்வின் நுண்ணிய படிமங்கள் இன்றும் அங்கு காணப்படுகின்றனவாம். அதைத் தேடுவதே பெர்சியுடைய ரோவரின் தலையாய பணி.

இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்கள், “உயிரே நுண்ணிய வடிவத்தில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்தான் உள்ளன. உயிரினம் வாழ்க்கையின் ஆதாரம் அங்கு இல்லை” என்று நம்புகிறார்கள். மேலும் சில விஞ்ஞானிகள் “செவ்வாய் கிரகத்தில் அதன் மெல்லிய வளிமண்டலம், வேறுபட்ட கனிம கலவை மற்றும் அதிக அளவு மேற்பரப்பு கதிர்வீச்சு காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்றும் கூறுகின்றனர்