சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு இனி செக் - டெக்னலாஜியுடன் களமிறங்கும் போலீஸ் puthiya thalaimurai
டெக்

சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு இனி செக் - டெக்னலாஜியுடன் களமிறங்கும் போலீஸ்

PT WEB

அடுத்தவரை ஏமாற்றி பிழைக்க, எவ்வளவு சாமர்த்தியமாக நடந்தாலும் சரி; அதனை கண்டுபிடித்து தடுக்க, தொழில்நுட்பங்களும், அறிவார்ந்த செயல்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன....

'அளவல்ல செய்தாங்கே, வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்...'

- திருக்குறளில் கள்ளாமை அதிகாரத்தில் உள்ள 289 ஆவது குறள் இது... அடுத்தவர் பொருளைத் திருடுவதை தவிர, வேறொன்றும் தெரியாதவர், அந்த தகுதியற்ற செயல்களாலேயே இறுதியில் அழிந்து போவார்கள் என்கிறது இந்த குறள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிச் சென்ற இந்தக் குறள், இன்றைய இணைய உலகிற்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பேருந்து பயணங்களிலோ, மக்கள் கூடும் இடங்களிலோதான் அதிகமாக திருட்டு நடந்தது. தற்போது அப்படி திருடுவதற்கான வாய்ப்பு அறவே குறைந்துவிட்டது. டிஜிட்டல் யுகத்தில் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் யுபிஐ மூலமாகவே நடைபெறுவதுதான் அதற்கு முக்கிய காரணம்.

cyber crime

ஆனாலும், காலத்திற்கேற்ப நவீன திருடர்கள் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை திருட உலகெங்கும் சைபர் க்ரைம் திருடர்கள் பெருகிவிட்டனர். போலி அழைப்புகளை மொபைல் போனுக்கு அனுப்பி, ஓடிபியை பெற்று திருடுவது ஒரு பாணி என்றால், மந்திரக்கோல் போல அனைவரது உள்ளங்கைகளிலும் தவழும் செல்போன்களை திருடி, அதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டுவதும் நவீன திருடர்களின் வழக்கமாகி வருகிறது.

அப்படித்தான் கடந்த ஆண்டு நவம்பரில் சென்னைவாசியான சந்தோஷ் என்பவர் மண்ணடியில் இருந்து மெட்ரோ ரயில் ஏறியபோது தனது செல்ஃபோனை தொலைத்தார். வேறொரு மொபைலில் இருந்து தொடர்ந்து தனது எண்ணுக்கு அவர் அழைத்தபோதும் எந்த பயனும் இல்லை.. மறுநாள் காலையில்தான் அவரது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. மறுபக்கத்தில் பேசியவர் மொபைல் போனை பத்திரமாக ஒப்படைக்க தன்னிடம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் தரவேண்டும் என பேரம் பேசியிருக்கிறார். மொபைல் போன் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்ததால், சந்தோஷ் அதற்கு சம்மதித்தார்.

ஆனால், திரும்ப ஒப்படைப்பது தாமதமானது. பலமுறை ஒத்திப்போடப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகேதான் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியான தகவல் சந்தோஷூக்கு புரிந்தது. செலவுக்காக ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது தான், வங்கிக் கணக்கில் இருந்த 6 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மொத்தமாக எடுக்கப்பட்டிருந்தது கண்டு மிரண்டு போனார் சந்தோஷ்.

Mobile Apps

மொபைல் போன் தொலைந்த அந்த இரு நாட்களில் அங்கீகாரம் இல்லாத பணபரிவர்த்தனை மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுமையாக சுருட்டப்பட்டிருந்தது. திருடப்பட்ட பணத்தின் மூலம் ஐந்து விலை உயர்ந்த போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், விலை உயர்ந்த ஒலிபெருக்கிகள் வாங்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்த சந்தோஷ் காவல்துறையிடம் புகார் அளித்தார். சைபர் க்ரைம் குற்றங்களை கண்டுபிடிக்க, தனித்து உருவாக்கப்பட்ட மத்திய கருவி அடையாள பதிவேடு உதவியது.

IMEI இருந்தால் போதும்...

முதலில் IMEI எண்ணை பயன்படுத்தி, தொலைந்து போன மொபைல் ஃபோனை முடக்கியது காவல்துறை. இதனால், மற்றொரு சிம் கார்டு மூலம் அந்த ஃபோனை இயக்க அடையாளம் தெரியாத நபர் முயன்றார். உடனடியாக மத்திய கருவி அடையாள பதிவேடு அதனை சென்னை காவல்துறையிடம் பகிர்ந்து மொபைல் போன் இருக்கும் டவர் லோகேஷனையும் தெரிவித்தது.

மற்றொருபுறம் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட பொருட்களை வைத்தும், அந்த நபரை நெருங்கிய காவல்துறை, மொபைல் போனையும், சந்தோஷின் பணத்தை வைத்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர்.

IMEI எண் மற்றும் மத்திய கருவி அடையாள பதிவேட்டின் உதவியை வைத்தும் இப்படி சென்னையில் மட்டும் 700 மொபைல் ஃபோன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் சேர்த்திருக்கின்றனர் காவல்துறையினர். அதில், 450 மொபைல் போன்கள் கடந்த மூன்று மாதங்களில் மீட்கப்பட்டவை.

IMEI இல்லனாலும் பரவால்ல... CEIR இருந்தா போதும்!

IMEI எண்களை கொண்டு சைபர் க்ரைம் கண்டுபிடித்துவிடுவதை அறிந்த விஷமிகள், அந்த எண்ணை மாற்றும் முறைகளையும் தற்போது கற்று வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கும் செக் வைத்திருக்கிறது மத்திய கருவி அடையாள பதிவேடு என்கிற CEIR.

மொபைல் போன்கள்

தொழில்நுட்பத்தின் உதவியால், மத்திய கருவி அடையாள பதிவேடு அதிநவீன முறைகளை கொண்டு போலியாக உருவாக்கப்படும் IMEI எண்களை எளிதாக கண்டறியும். அவற்றை ஈஸியாக CRACK செய்து TAMPERING நடந்திருப்பதை கண்டறிந்து விடுகிறது.. குறிப்பாக வழக்கத்திற்கு மாறாக பயன்படுத்தப்படும் PATTERNS, IMEI எண்களுடன் பொருந்தாத புதிய எண்கள் ஆகியவை திருடப்படும் மொபைல் போன்களை கண்டுபிடிக்க உதவுகிறது.

இந்த தகவல்களை CEIR கண்டறிந்தால், உடனடியாக அது உள்ளூர் காவல்துறை மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகளுக்கு மத்திய கருவி அடையாள பதிவேடு உடனடியாக பகிர்ந்துவிடுகிறது. குறிப்பாக மொபைல் ஃபோன் அண்மையில் காட்டிய டவர் லோகேஷன்ஸ், சிசிடிவி காட்சிகளும் உள்ளூர் காவல்துறைக்கு பகிரப்படுகிறது.

IMEI என்றால் என்ன? CEIR என்றால் என்ன?

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்துவமான 15 இலக்க கொண்ட IMEI எண் வழங்கப்பட்டிருக்கும். அதிலும் துல்லியத்தை உறுதி செய்ய, அந்த எண்களின் கூட்டுத் தொகையைகுறிப்பிடும் ஃபார்முலாவும் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த கூட்டுத் தொகை ஃபார்முலா பொருந்தாமல் போனால், ஒரு IMEI எண், பல கருவிகளுக்கு பயன்படுத்தி இருந்தால், மத்திய கருவி அடையாள பதிவேட்டுக்கு காட்டிக் கொடுத்துவிடும்.

அதை வைத்து, திருடப்படும் மொபைல் ஃபோன்கள் கண்டுபிடிக்கப்படுவதாக சொல்லும் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன், “ஃபோன் திருடு போனால் உடனடியாக புகார் அளிப்பதுதான் பல சிக்கல்களை தவிர்க்க வழிவகுக்கும்” என கூறுகிறார்.

மொபைல் ஃபோன் திருடப்பட்டுவிட்டதாக மத்திய கருவி அடையாள பதிவேட்டுக்கு தகவல் கிடைத்தால், உடனடியாக குறிப்பிட்ட IMEI எண் கொண்ட அந்த மொபைல் ஃபோன் முடக்கப்பட்டு விடுகிறது. அதன் பின், நெட்வொர்க் ஆப்ரேட்டர், மொபைல் டவர் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. மொபைல் போன் திருடப்பட்டால் உடனடியாக WWW.CEIR.GOV.IN தளத்திற்கு சென்று அதில் இருக்கும் விண்ணப்பத்தில் நமது IMEI எண், மொபைல் எண், காவல்துறையிடம் அளித்த புகார் நகல் ஆகியவற்றை இணைத்தால் போதும்.... மொபைல்ஃபோன் எங்கு இருக்கிறது என்ற tracking ஆரம்பித்துவிடும்...

இது தவிர 14422 என்ற எண்ணையும் மொபைல் ஃபோன் பயன்பாட்டாளர்கள் தொடர்பு கொண்டு தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் ஃபோனை பற்றி புகார் தெரிவிக்கலாம்.

போலி IMEI... கண்டறிவது எப்படி?

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்துவமான 15 இலக்க IMEI எண் வழங்கப்பட்டிருக்கும் துல்லியத்தை உறுதி செய்ய, IMEI எண்களின் கூட்டுத் தொகையை குறிப்பிடும் ஃபார்முலா உருவாக்கப்பட்டிருக்கும்.

Mobile Use

கூட்டுத் தொகை ஃபார்முலா பொருந்தாமல் போனாலோ, ஒரு IMEI எண் பல கருவிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ காட்டிக் கொடுத்துவிடும். இதன்மூலம், திருடப்பட்ட மொபைலானது ஃபோனின் IMEI எண்ணை வைத்து முடக்கப்படுகிறது. அதன் பின், நெட்வொர்க் ஆப்ரேட்டர், மொபைல் டவர் மூலம் அது கண்டுபிடிக்கப்படுகிறது.