தமிழ்நாடு

தமிழகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேரவை..?

webteam

தமிழகத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி பேரவை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.

ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார். அத்துடன் அவர் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அவற்றை அதிரடியாகவும் நடைமுறை படுத்தி வருகிறார். 

இந்நிலையில் தமிழகத்தில் பாஸ்கர் என்பவர், முகநூல் வாயிலாக ஜெகன் மோகன் ரெட்டி பேரவை எனும் பெயரில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.  அதன்படி, வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆந்திர மாநில பிரச்சார அணி தலைவர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜா, ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கான சிறப்பான ஆட்சி செய்து வருவது குறித்து கூறியதோடு, நிர்வாகிகளுக்கு  பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள் பிரேம், பிரபு புலியேந்திரன் மற்றும் ஆந்திர மற்றும் தமிழக மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.