சவுக்கு சங்கர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

"யார் மனதையும் புண்படுத்த மாட்டேன்.." - சவுக்கு சங்கர் அலுவலகத்தில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

PT WEB

யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 24ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் வீடியோ ஒன்றில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4ஆம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காரில் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் அவர் கைதானார். இந்த நிலையில், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

சுமார் 10 மணி நேர சோதனைக்குப் பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கும் சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தியாகராய நகரில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இதனிடையே, அரசு மீது ஆதாரமின்றி ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டுசெல்லப்பட்டார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவரது தரப்பு வழக்கறிஞர் விஜயராகவன்,'யார் மனதும் புண்படும் விதமாக இனி கருத்து தெரிவிக்க மாட்டேன்' என சவுக்கு சங்கர் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.