போலீசார் விசாரணை pt desk
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்த நபர் - கட்டிவைத்து அடித்ததால் உயிரிழந்த இளைஞர்

அரக்கோணம் அருகே வீட்டில் திருட வந்த நபரை கட்டி வைத்து அடித்ததில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: நரேஷ்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (24). இவர் அவருடைய நண்பருடன் நேற்று இரவு அதே பகுதியில் வசித்து வரும் வேதாச்சலம் என்பவரது மகன் விஜயகுமார் வீட்டிற்குள் நுழைந்து திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேதாச்சலம் குடும்பத்தினர் கூச்சலிட்டதை அடுத்து மாதேஷின் நண்பர் தப்பிச் சென்றநிலையில், மாதேஷ் பிடிபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து மாதேஷை கட்டி வைத்து அவரை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதில் அவர், மயங்கிய நிலையில் இது குறித்து வேதாச்சலம் குடும்பத்தினர், அவசர எண் 100 மூலமாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தக்கோலம் காவல்துறையினர் மயங்கிய நிலையில் இருந்த மாதேஷை மீட்டு அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக வேதாச்சலம் மற்றும் அவரது மகன் விஜயகுமார் உட்பட 3 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.