உயிரிழந்த சதீஷ்குமார் PT Desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறிவிழுந்த இளைஞர் பலி!

PT WEB

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (20). இவர், சென்னையில் தங்கியிருந்து கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ 3ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். படிப்புக்கு இடையே அவர் பகுதி நேர வேலையாக திருமண மண்டபங்களில் உணவு பரிமாறும் பணி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த சதீஷ்குமார்

அப்படி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மாலை மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உணவு பரிமாறும் பணிக்காக சதீஷ் சென்றபோது, அங்கிருந்த ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த இளைஞர் சதீஷ் வீடு

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.