தமிழ்நாடு

வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்கியதால் பிரச்னை : கைகலப்புக்கு பின் திடீரென இறந்த இளைஞர்..!

webteam

மதுரையில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்கியதால் ஏற்பட்ட பிரச்னையால் ஏற்பட்ட கைகலப்புக்குப் பின்னர் இளைஞர் மர்மமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மங்களாம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மற்றும் ராஜா ஆகிய இருவரின் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இரு வீட்டினருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றிரவு பக்கத்து வீட்டு ராஜாவுக்கும், பாண்டிக்கும் இடையே கழிவுநீர் தேங்கி நிற்பது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து இரவில் உறங்க சென்ற பாண்டி திடீரென பேச்சு, மூச்சு இல்லாமல் கிடப்பதை கண்ட அவரது தாய் பஞ்சு உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு பாண்டி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாய் பஞ்சு கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான காவல்துறையினர் உயிரிழந்த பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மகனை இரவு சண்டையின் போது ராஜா அடித்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும், ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் பாண்டியின் தாய் பஞ்சு காவல்துறையிடம் புகார் அளித்தார். தற்போது ராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.