insta love model freepik
தமிழ்நாடு

மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்! 2வது கணவரையும் உதறி இன்ஸ்டா காதலரைத் தேடிவந்த இளம்பெண்!

Prakash J

இன்று, உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகி அவர்கள்மீது காதல் வயப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருவதுடன், அதற்காக தங்களது இனம், மதம், மொழி கடந்து நாடுவிட்டுச் செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் நம் தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது.

lovers model

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் மதுபாலா (21). இதே மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு, மதுபாலாவின் பெற்றோர் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே மதுபாலாவிற்கும் கார்த்திகிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் மதுபாலாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் சென்னையில், மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் மதுபாலாவின் பெற்றோருக்குத் தெரியவர, உடனே மாப்பிள்ளை பார்த்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த மகேஷ் என்பவரை, மதுபாலாவிற்கு 2வதாக மணமுடித்து வைத்துள்ளனர். இந்த திருமணம், கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருமணமான அடுத்த 2 மாதங்களில் மகேஷ் - மதுபாலா ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

lovers model

இதனால் கடந்த மாதம் 21ஆம் தேதி கணவர் மகேஷுக்கு தெரியாமல் தனது இன்ஸ்டாகிராம் காதலர் தினேஷ்குமாரைத் தேடி சென்னை வந்த மதுபாலா, அவருடன் தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். மேலும், கடந்த 10 நாட்களாக அவருடன் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி மதுபாலா, தனது 2வது கணவர் மகேஷுக்கு போன் செய்து, "நண்பரை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளேன்” எனத் தெரிவிக்க, அதற்கு மகேஷ், "உன்னைக் காணவில்லை என கேரளாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்" எனப் பதிலளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாலா, தனது காதலர் தினேஷ்குமாருடன் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததுடன், ‘தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனவும் இருவரும் மனு கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின்போது மதுபாலா போலீசாரிடம், ’தன்னுடைய முதல் கணவரான கார்த்திக், தன்னைச் சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்றும், தன்மீது சந்தேகப்பட்டதாகவும் கூறியுள்ளார். தவிர, அவருடைய தந்தையும் தன்னிடம் பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுகுறித்து கார்த்திக்கிடம் கூறியபோது அவர் இதைக் கண்டுகொள்ளாததாலேயே அவரைப் பிரிய நேரிட்டது’ எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ‘இரண்டாவது கணவரான மகேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தனக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரும் தன்னைச் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை.

police station model

எனவேதான் காதலரைத் தேடி சென்னை வந்தேன். எனக்கு 18 வயது நிரம்பிவிட்டதால் எனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு. பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. காதலர் தினேஷ்குமாருடன்தான் செல்வேன்’ என போலீசாரிடம் மதுபாலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவர் மாயமானதாக கேரள மாநில போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளதால் மதுபாலா சென்னையில் தங்கி இருப்பது குறித்து கேரள மாநில போலீசாருக்கு வேளச்சேரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கேரள போலீசாரிடம் இருந்து உரிய பதில் வந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.