சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சேலம்: சாலையோர பள்ளத்தில் கிடந்த சூட்கேஸில் அழுகிய நிலையில் பெண் சடலம்!

PT WEB

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று சாலையோர பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சங்ககிரி காவல் நிலையம்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது அதில், நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணிற்கு 20 முதல் 30 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சூட்கேஸை இப்பகுதியில் வீசிச்சென்றது யார், கொலை செய்தவர் யார் என்று குறித்தெல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.